Sunday, March 02, 2008

தமிழில் வழிபாடு செய்ய மறுக்கும் பார்ப்பனர்களது பூநூலை அறுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

(தமிழ்நாட்டில் சமய குரவர்கள் பாடிய தேவார திருவாசகத்தை சிதம்பரம் கோயில் அம்பலத்தில் நின்று பாட தீட்சதகர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக தடை செய்து வருகிறார்கள். கோயில் கட்டியவன் தமிழன். சிற்பங்களைச் செதுக்கியவன் தமிழன். ஓவியங்களைத் தீட்டியவன் தமிழன். ஆனால் அவனால் கர்ப்பககிரகத்தின் உள்ளே அல்ல வெளியில் அம்பலத்தில் நின்று தேவாரம் திருவாசகம் பாட முடியாத இழிநிலை.

இதிலிருந்து என்ன தெரிகிறது. கோயிலும் இந்துக் கடவுளரும் சமற்கிருதமும் தமிழருக்கு அந்நியமானவை. தமிழன் ஆரியரின் கற்பனைக் கடவுளரை உண்மைக் கடவுள்கள் என நினைத்து அர்ச்சனை, அபிசேம், தேர், திர்த்தம், திருவிழா செய்து தனது பொருளையும் காலத்தையும் வீணாகச் செலவழிக்கிறான்.

தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை இல்லை. தமிழிலும் அர்ச்சனை என்ற அறிவித்தல் பலகைதான் கோயிலகளில் வைத்திருக்கிறார்கள். பெரும்பான்மையான தமிழக் கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யமாட்டார்கள். கேட்டால். சமஸ்கிருத மொழிக்கு மட்டும் மந்திரம் உண்டு தமிழிமொழிக்கு அந்த ஆற்றல் கிடையாது என்கிறார்கள்.

நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த மறைமொழிதானே மந்திரம் என்ப என்ற தொல்காப்பியர் 2,500 ஆண்டுகளுக'கு மந்திரம் என்றால் என்ன என வரைவிலக்கணம் வகுத்திருப்பது பலருக்குத் தெரியாதிருக்கிறது. . இதே நிலை ஆங்கில மொழிக்கும் ஒரு காலத்தில் இருந்ததை நாம் அறிய வேண்டும். சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்தில் மேட்டுக் குடிகளின் மொழியாகவும்- வழிப்பாட்டு மொழியாகவும் இலத்தீன் இருந்தது. அப்போது மக்களின் மொழியாக இருந்த ஆங்கிலத்தில் வழிபாடு செய்யவேண்டும் அல்லது உயர்கல்வி பயில வேண்டும் என்று யாராவது சொன்னால் அவர் அரசின் எதிரியாகவும், மதத்தின் விரோதியாகவும் கருதப்பட்டார்.

பொதுமக்களிடம் இது குறித்து பய உணர்வு பரவி இருந்ததாக வரலாறு கூறுகிறது.

முதலாவது எலிசபெத்தின் தந்தையாகிய எட்டாம் ஹென்றி மன்னன் காலத்திலே ஆங்கில நாட்டு மதக் கொள்கையில் பெரிய மாறுதல் ஏற்பட்டது. எட்டாம் ஹென்றி ஒருவர் பின் ஒருவராக ஆறு மனைவியரை மணந்தான். முதல் மனைவியை நீக்கிவிட்டு இரண்டாம் மனைவியை முறையாகத் திருமணம் செய்து இராணியாக்குவதற்கு அனுமதி கேட்டு சமயத் தலைவராகிய உரோமாபுரிப் பாப்பரசரிடம் விண்ணப்பித்தான்.

கத்தோலிக்க கிறிஸ்தவ சமயக் கொள்கைப்படி முறையாக மணந்த மனைவியை மணமுறிவு செய்தல் மத விரோதமானது. ஆதலின், பாப்பரசர் எட்டாம் ஹென்றி மன்னன் மறுமணம் செய்வதற்கு ஒப்புதல் கொடுகக மறுத்தார். இதனால் வெகுண்டெழுந்த மன்னன் உரோம் நாட்டு பாப்பரசருட்ன் இருந்த கத்தோலிக்க சமயத் தொடர்பை அறுததுக் கொண்டு ஆங்கில திருச்சபையை உருவாக்கி அதன் தலைமைப் பொறுப்பைத் தானே எடுத்துக் கொண்டான்.

அடுத்து வழிபாட்டை இலத்தீனில் இருந்து ஆங்கில மொழிக்கு மாற்றினான். பாதிரிமார்கள் ஆறு மாதத்துக்குள் ஆங்கிலத்தில் வழிபாடு செய்யக் கற்றுக் கொள்ளவேண்டும் என்றும் தவறினால் அவர்களது சீருடை களையப்பட்டு வீட்டுக்கு அனுப்பப் படுவர் என எச்சரிக்கை செய்தான். இதனால் இலத்தீன் ஒழிந்து ஆங்கில வழிபாடு நடைமுறைக்கு வந்தது. இது போலவே தமிழக அரசு தமிழை வழிபாட்டு மொழியாக சட்டப்படி அறிவிக்க வேண்டும். தமிழில் வழிபாடு செய்ய மறுக்கும் பார்ப்பனர்களது பூநூலை அறுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் கடவுள் கோபித்துக் கொள்ள மாட்டார். அவருக்கு மொழிச்சிக்கல் இல்லை. "அர்ச்சனை பாட்டே ஆகும் ஆதலால் சொற்றமிழில் எனைப் பாடுக" என சுந்தரரை சிவன் கேட்பதாகச் சேக்கிழார் பாடியிருக்கிறார். நாயன்மார்கள் ஆரியம் கண்டாய் தமிழ் கண்டாய் என்றுதான் பாடியிருக்கிறார்கள.
(Nakkeeran)

தடுத்த தீக்ஷிதர்கள்-சிதம்பரத்தில் பரபரப்பு!
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008

சிதம்பரம்: தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து, சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பலமேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடியவர்களை தடுத்த தீக்ஷிதர்களை காவல்துறையினர் குண்டுக் கட்டாக தூக்கி வந்து வெளியே விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்சிதர்கள் தடை போட்டனர்.இதையடுத்து உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவெடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை பாடலாம் என அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசின் உத்தரவைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் தொடர்ந்து போராடி வரும் சிதம்பரத்தைச் சேர்ந்த ஓதுவார் ஆறுமுகச்சாமி உள்ளிட்ட பலரும் கோவிலுக்கு திரண்டு வந்தனர்.கோவிலில் மாவட்ட எஸ்.பி. பிரதீப் குமார் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.ஆறுமுகச்சாமி தலைமையில் உள்ளே சென்ற ஓதுவார்கள், திருச்சிற்றம்பல மேடையில் நின்றபடி தேவாரம் பாட முயன்றனர். ஆனால் அவர்களை தீக்சிதர்கள் கும்பலாக வந்து தடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து எஸ்.பி. பிரதீப் குமார் உள்ளிட்ட காவல்துறையினர் உள்ளே நுழைந்தனர். அவர்களையும் தீக்சிதர்கள் தடுத்தனர். மேல் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் போக வேண்டும் என்று கூறினர்.இதையடுத்து மேல் சட்டையைக் கழற்றி விட்டு உள்ளே புகுந்த போலீஸார், அங்கு தகராறு செய்த தீக்சிதர்களை குண்டுக் கட்டாக தூக்கி வந்து கோவிலுக்கு வெளியே விட்டனர்.இதைத் தொடர்ந்து ஆறுமுகச்சாமி உள்ளிட்டோர் மகிழ்ச்சியும், பக்திப் பரவசமுமாக தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடி மகிழ்ந்தனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது. (thats tamil)

சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடலாம்-அரசு உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 2, 2008

சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சிற்றம்பல மேடையில் இருந்து தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்ஷிதர்கள் தடை போட்டு விட்டனர்.இதை எதி்ர்த்து போராட்டங்கள் நடந்ததையடுத்து தேவாரம் பாடலாம், ஆனால் மேடையில் இருந்து பாடக் கூடாது, கீழே உள் மண்டபத்தில் இருந்தபடிதான் பாட வேண்டும் என்றனர்.இந் நிலையில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி உத்தரவிட்டார்.இதையடுத்து தீக்ஷிதர்கள் சார்பில் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது.இதைத் தொடர்ந்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி, கால பூஜை முடிந்த பின்னர், அடுத்த பூஜைக்கு இடையே உள்ள நேரத்தில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி 30 நிமிடங்களுக்கு தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம். யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் இவற்றைப் பாடலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடப் போவது குறித்து முன்கூட்டியே கோவில் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவு தெரிவிக்கிறது.இதன் மூலம் இதுவரை தேவாரம், திருமறை ஆகிய தமிழ்ப் பாடல்களைப் பாட முடியாமல் தவித்த வந்த பக்தர்களுக்கு பெரும் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தீக்ஷிதர்கள் அடாவடியாக நடந்து கொள்வதாக கூறிப் பல்வேறு சிவாச்சாரியார்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவை பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன என்பது நினைவிருக்கலாம்.

சிறிய சைப்பிரஸ் தீவில் இரண்டு சுதந்திர நாடுகள்!
கொசேவோவின் ஒரு தலைப் பட்சமான சுதந்திரப் பிரகடனம் பல நாடுகளின் அடி வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது. குறிப்பாக பெரும்பான்மை தேசிய இனத்தவரின் மேலாண்மையையும் அடக்குமுறையையும் கொடுங்கோல் ஆட்சியையும் திணிக்கும் நாடுகள் மத்தியில் இந்தப் பயம் குடி கொண்டுள்ளது.
அதே சமயம் சுதந்திரத்துக்காக ஆயுதம் ஏந்தியோ ஏந்தாமலோ போராடும் சிறுபான்மை தேசிய இனங்கள் மத்தியில் எதிர்கால நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உருவாக்கியுள்ளது.
கொசோவோவை ஒரு இறையாண்மை படைத்த நாடாக மேற்குலக நாடுகள் முண்டியடித்துக் கொண்டு அங்கீகாரம் வழங்கியது பன்னாட்டு அரசியலில் எதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பன்னாட்டு அரசியலில் பல முக்கியமான பாடங்களைப் புகட்டியுள்ளது.
முதலாவது பாடம் - அய்க்கிய நாடுகள் அவையின் தீர்மானங்கள் பெரிய நாடுகளை, குறிப்பாக மேற்குலக நாடுகளைக் கட்டுப்படுத்த உதவாது.
இரண்டாவது பாடம் - நாடுகள் தங்கள் வலிமை, தங்களது நட்பு நாடுகளின் வலிமை, பகை நாடுகளின் வலிமை ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் எழுந்துள்ளது.
மூன்றாவது பாடம் - பயங்கரவாதத்துக்கு எதிரான போர் ஒருவருக்குப் பயங்கரவாதியாகத் தெரிபவர் இன்னொருவருக்கு விடுதலை வீரனாகக் காட்சி அளிப்பதைக் கட்டுப்படுத்த முடியாது.
நான்காவது பாடம் - ஒரு நாட்டின் இறைமை என்பது கட்டற்றது (Not Absolute) அன்று.
ஒரு நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடும் கல்வெட்டில் எழுதிய எழுத்துக்கள் அல்ல. எல்லைகளும் மீள வரைய முடியாதவை அல்ல. ஆனால் இந்த அரசியல் பாடங்களை ஸ்ரீலங்கா வேண்டுமென்றே படிக்க மறுக்கிறது.
ஸ்ரீலங்காவின் வெளியுறவு அமைச்சு ஒருபடி மேலே போய் கொசோவோ சுதந்திரம் அடைந்ததைப் பார்த்து ஒப்பாரி வைத்து அழுதுள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டந்தான் அதற்குக் காரணம்.
(அ) கொசோவோவின் சுதந்திரப் பிரகடனம் சேர்பிய பெரும்பான்மை மக்களின் ஒப்புதலுடன் செய்யப்படவில்லை.
(ஆ) யூன் 10, 2008 இல் நிறைவேற்றப்பட்ட அய்க்கிய நாடுகளின் பாகாப்பு அவையின் தீர்மானம் 1224 எல்லா நாடுகளது இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் உறுதிசெய்வதாகக் கூறுகிறது. ஆனால் அது மீறப்பட்டுள்ளது.
(இ) பாதுகாப்பு அவையின் தீர்மானத்தின் படி கொசோவோவின் எதிர்காலத் தகுதி பற்றி பேச்சு வார்த்தை மூலம் ஒரு அரசியல் தீர்வை எட்டுவது என்பது முற்றாகப் பேசி முடிவு எட்டப்படவில்லை.
(ஈ) கொசோவோவின் தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனம் பன்னாட்டு உறவுகளைப் பேணுவதில், பன்னாட்டு இறையாண்மை படைத்த நாடுகளை மதிப்பதில் தவறியுள்ளது.
(உ) பன்னாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆக கொசோவோ சுதந்திரப் பிரகடனம் அமைந்துள்ளது. “கொசோவோவின் ஒருதலைப் பட்சமான சுதந்திரப் பிரகடனம் பன்னாட்டு அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆக அமைந்துள்ளது” என ஸ்ரீலங்கா ஒப்பாரி வைப்பது நகைப்புக்குரியது.
ஸ்ரீலங்கா ஒப்பாரி வைப்பது போல் இன, மொழி, பண்பாட்டு அடிப்படையில் புதிய நாடுகள் தோன்றியிருப்பது உலக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக இருக்கவில்லை. மாறாக அவை அமைதிக்கும் பாதுகாப்புக்கும் வழி கோலியுள்ளது. கடந்த கால உலக வரலாற்றை காய்தல் உவத்தில் இன்றிப் படிப்போர் புதிய நாடுகளின் தோற்றம் உலக அமைதியை உருவாக்க உதவியுள்ளது என்பதை ஒத்துக்கொள்வார்கள்!
அய்க்கிய நாடுகள் நிறுவப்பட்ட போது அதன் உறுப்புரிமை 50 மட்டுமே. இன்று அந்த எண்ணிக்கை 192 ஆக உயர்ந்துள்ளது. இதனால் உலக அமைதியும் பாதுகாப்பும் அதிகரித்துள்ளவேயொழிய குறையவில்லை!
குட்டிக் குட்டி நாடுகள், தமிழீழத்தைவிட அளவிலும் மக்கள் தொகையிலும் குறைந்த சுமார் 50 நாடுகள் சுதந்திர நாடுகளாக அய்க்கிய நாடுகள் அவையில் கொலு வீற்றிருக்கின்றன.சைப்பிரஸ் நாட்டைப் பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்கள். மத்திய தரைக்கடலில் காணப்படும் மூன்றாவது பெரிய தீவு சைப்பிரஸ். சைப்பிரஸ் என்றால் கிரேக்க மொழியில் செப்பு என்று பொருள்.
சைப்பிரஸ் துருக்கியின் தென்திசை கடலோரமாகவும் சிரியாவின் மேற்குக் கரையோரமாகவும் இருக்கிறது.
சைபிரஸ் பலநூற்றாண்டு காலமாக சைப்பிரஸ் தீவு பினீசியன்ஸ் மற்றும் கிரேக்கர்கள் ஆகியோரது கொலனி நாடாக இருந்து வந்தது. 1571 ஆம் ஆண்டு துருக்கி அதனைத் தாக்கிக் கைப்பற்றியது. அங்கு பெருவாரியான துருக்கியரைக் குடியேற்றி தனது கொலனி நாடாக வைத்துக் கொண்டது. முதலாவது உலகப் போர் வெடித்தபோது பிரித்தானியா சைப்பிரஸ் தீவைக் கைப்பற்றியது.
1925 இல் சைப்பிரஸ் பிரித்தானியாவின் கொலனி நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. கிரேக்கத்தைத் தாய்நாடாகக் கருதும் சைப்பிரசில் வாழ்ந்த கிரேக்க மக்கள் சுதந்திரம் கேட்டுப் போராடினார்கள். சைப்பிரஸ் தீவு கிரேகத்தோடு இணைக்க வேண்டும் என்றும் போராடினார்கள்.
1955 இல் சைப்பிரஸ் போராளிகளின் தேசிய அமைப்பு (EOKA) பிரித்தானியாவுக்கு எதிராக ஒரு கெரில்லா போரைத் தொடங்கியது. 1958 இல் ஆயர் மாகாறியோஸ் (Archibishop Markarios) கிரேக்கத்தோடு இணைவதற்குப் பதில் சைப்பிரஸ் ஒரு சுதந்திரநாடாக மலரவேண்டும் என்றார்.
இதே சமயம் சைப்பிரஸ் துருக்கியர்கள் சைப்பிரஸ் தீவு கிரேக்கர் – துருக்கியர் மக்களிடை பிரிக்கப்பட வேண்டும் எனக் கோரினார்கள். சைப்பிரஸ் தீவு 1960, ஓகஸ்ட் 16 இல் சுதந்திரம் அடைந்தது.
கிரேக்கர்களும் துருக்கியர்களும் இணைந்து ஒரு அரசியல் யாப்பை எழுதிக் கொண்டார்கள். ஆயர் மாகாறியோஸ் சைப்பிரஸ் தீவின் முதல் ஆட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். ஆனால் வெகுவிரைவில் கிரேக்கர்கள் - துருக்கியர் மத்தியில் சண்டை தொடங்கியது.
1965 இல் அய்க்கிய நாடுகளின் அவையின் அமைதிப்படை அங்கு அனுப்பப்பட்டது.
1974 ஆம் ஆண்டு யூலை 15 ஆம் நாள் ஆயர் மார்க்கோஸ் சைப்பிரஸ் தேசிய பாதுகாப்புப் படை நடத்திய புரட்சியில் பதவி கவிழ்க்கப்பட்டார்.
யூலை 20 இல் துருக்கி சைப்பிரஸ் தீவில் வாழும் துருக்கியரைக் காப்பாற்றும் தார்மீக உரிமை தனக்கு இருக்கிறது எனக் கூறிக் கொண்டு அதன் மீது படையெடுத்து சைப்பிரசின் வடபகுதியை அண்டிய 37 விழுக்காடு நிலப்பரப்பைக் கைப்பற்றியது.
இதனால் 180,000 கிரேக்கர்கள் வடக்கில் இருந்து தெற்குக்கு ஏதிலிகளாக இடம் பெயர்ந்தார்கள்.
1974 யூலை 22 இல் அய்க்கிய நாடுகள் அவை இரு தரப்பினருக்கும் இடையில் ஒரு போர் நிறுத்தத்தை கொண்டு வந்தது. துருக்கிப் படை சைப்பிரசில் நிலைகொள்ள அனுமதிக்கப்பட்டது.
அதே ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஆயர் மாகாறியோஸ் மீண்டும் ஆட்சித் தலைவராகப் பதவி ஏற்றார். அடுத்த ஆண்டு சைப்பிரஸ் தீவு கிரேக்கர் பகுதி துருக்கியர் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இடையில் அய்க்கிய நாட்டு அவையின் அமைதிப் படை நிறுத்தப்பட்டது.
1983 நொவெம்பர் 15 இல் துருக்கி சைப்பிரஸ் “வட துருக்கி குடியரசு” எனத் தன்னை ஒரு தலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்தியது. ஆனால் அய்யன்னா பாதுகாப்பு அவை அதனை அங்கீகரிக்க மறுத்தது. துருக்கி மட்டும் அதனை அங்கீகரித்தது.
இரண்டு சைப்பிரசையும் இணைப்பதற்கு அய்யன்னா நடத்திய பேச்சு வார்த்தை வெற்றிபெறவில்லை. 2002 இல் கிரேக்க சைப்பிரஸ் அய்ரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்து கொண்டது.
இப்போது 2008, பெப்ரவரியில் கிரேக்க சைப்பிரஸ் ஆட்சித் தலைவர் தேர்தலில் பொதுவுடமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட Dimitris Christofias என்பவர் 53.4 விழுக்காடு வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவர் சைப்பிரஸ் தீவின் இரண்டு பகுதிகளையும் இணைக்கப் போவதாகச் சூளுரைத்துள்ளார்.
சைப்பிரஸ் பற்றிய தரவுகள்
மொத்த நிலப்பரப்பு - 9,250 சகிமீ (3,355 சகிமீ வட சைப்பிரஸ்)
பருவம் - வெப்பமான கோடை குளிர்மையான மாரிவளங்கள் - செப்பு, கனிக்கல் (gypsum) மரப்பலகை, உப்பு, பளிங்குக் கல், செந்நிறக் களிமண்
மொத்த மக்கள் தொகை - 788,457 (யூலை 2007 மதிப்பீடு)
இனங்கள் - 77 விழுக்காடு கிரேக்கர், 18 விழுக்காடு துருக்கியர் எனையவர் 5 விழுக்காடு (2001) சமயம் - கிரேக்க பழமைவாத சமயம் 78 விழுக்காடு, முஸ்லிம் 18 விழுக்காடு ஏனையவர்கள் 4 விழுக்காடு
நாணயம் - யூறோ
மொழி - கிரேக்கம், ஆங்கிலம்
தலைநகர் - நிக்கோசியா
உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் – 210,000 (30 ஆண்டுகளாக கிரேக்கர் மற்றும் துருக்கியர்)
கொசோவோ போலவே சைப்பிரசிலும் வெவ்வேறு இன, மொழி, சமயம் சார்ந்தோர் ஒன்றாக இருக்க முடியாத என்ற உண்மை தெரிகிறது. பிரிந்து சென்றால்தான் இரண்டு இனங்களுக்கு மத்தியில் நிரந்தர அமைதியை உருவாக்க முடியும். நிரந்தரப் பாதுகாப்பை உறுதிசெய்ய முடியும்.
இறைமை என்பது மக்களுக்குச் சொந்தமானது. இந்த உண்மையை மேற்குலக நாடுகள் கொசோவோ நாட்டைப் பொறுத்தளவில் ஒத்துக் கொண்டுள்ளன. தமிழீழ மக்களின் இறைமையையும் மேற்குலக நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய நாடுகளுக்கும் அந்தக் கோட்பாடு விரிவு படுத்தப் பட வேண்டும்.
எலிவளை என்றாலும் தனிவளை வேண்டும் என்பார்கள்.
சுதந்திரத்துக்காகப் போராடி வரும் திபேத், தமிழீழம், பாஸ்க், கஷ்மீர், அசாம், நாகலாந்து, தாய்வான் போன்ற நாடுகளில் நேரடி வாக்கெடுப்பு நடத்தி மக்கள் அளிக்கும் தீர்ப்பின் அடிப்படையில் அந்த நாட்டு மக்களின் சுதந்திரம் அங்கீகரிக்கப்;பட வேண்டும்.

Labels: