Monday, July 31, 2006

அய்யப்பனுக்கு மீண்டும் தீட்டு

தலைமைப் பூசாரி பாலுறவு வழக்கில் கைதாகிறார்!

திருமகள்

மரம் சும்மா இருக்க விரும்பினாலும் காற்று அதனை விடுவதில்லை.

நான் அய்யப்ப சாமியைப் பற்றிக் கவலைப் படாவிட்டாலும் அவரது பக்தர்கள், பூசாரிகள், சோதிடர்கள் என்னை விடுவதாக இல்லை.முன்னர் நான் எழுதிய “அய்யப்பனுக்குத் தீட்டு! பயங்கர கோபத்தில் இருக்கிறார்!” என்ற கட்டுரையைப் படித்து விட்டுப் பலர் போற்றி எழுதியிருந்தார்கள். மதத்தின் பெயரால் பக்தி வாணிகம் செய்யும் பாதகர்களின் வண்டவாளங்களைத் தோலுரித்துக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார்கள். போற்றுதல் இருந்தால் தூற்றலும் இருக்கத்தானே செய்யும். சிலர் தூற்றி எழுதியிருந்தார்கள். நான் மத நம்பிக்கையையும் கடவுள் நம்பிக்கையையும் சிதைப்பதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள். உண்மையில் எனது கட்டுரையில் வந்த சங்கதிகள் என்னுடைய சொந்தச் சரக்கல்ல. எல்லாம் புதின ஏடுகளில் வந்த செய்திகளே. ஏன் அதன் தலைப்புக் கூட செய்தி ஏடுகளில் வந்ததுதான்.

அய்யப்ப பக்தர்களுக்கு இப்போது பொல்லாத காலம். அவர்களுக்குச் சோதனைக்கு மேல் சோதனை வந்த வண்ணம் உள்ளது. “அய்யப்பனுக்குத் தீட்டு! பயங்கர கோபத்தில் இருக்கிறார்!” என்பதைப் படித்துவிட்டு பதை பதைத்த பக்தர்கள் இப்போது வந்துள்ள செய்தியைப் படித்து விட்டு என்ன செய்யப் போகிறார்களோ நானொன்றும் அறியேன் பராபரமே!

இன்றைய தமிழக முதல்வர் சரியாக 54 ஆண்டுகளுக்கு முன்னர் திரைக்கதை உரையாடல் எழுதி வெளிவந்த பராசக்தி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வாயிலாகக் கோயில் பூசாரிகளை ஒரு பிடி பிடித்தார். அந்த அனல் தெறிக்கும் உரையாடல் அப்போது மிகவும் புகழ் அடைந்தது.

“கோயிலில் குழப்பம் விளைவித்தேன் கோயில் கூடாதது என்பதற்காக அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன் அவன் கடவுள் பக்தன் என்பதற்காக அல்ல. கடவுளின் பெயரைச் சொல்லிக் கொண்டு காமுகனாக இருந்தான் என்பதற்காக…..” என்பதுதான் அந்த வசனம்.

பராசக்தி திரைப்படத்துக்கு முன்னர் அண்ணா கதை வசனம் எழுதி வெளிவந்த வேலைக்காரி திரையுலகில் ஒரு திருப்புமுனை ஆக அமைந்தது. நூறு நாளுக்கு மேல் ஓடி சக்கை போட்டது.

அண்ணாவின் உரையாடல் “உறையில் இருந்து எடுத்த வாள் பளிச் பளிச் என்று மின்னுவதாக” மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதியிருந்தார்.“பகலிலே இளித்தவாயர்களுக்கு உபதேசம் இரவிலே இன்பவல்லிகளுடன் சல்லாபம்” என்ற உரையாடல் அதில் வரும். அந்த உரையாடலை நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி பேசுவார்.

அரை நூற்றாண்டு சென்ற பின்னரும் நிலைமை மாறவில்லை. சபரிமலை தந்திரி அதாவது சபரிமலை தலைமைப் பூசாரி கண்டாரு மேனகுரு¸ கைதாகிறார்! அய்யப்பன் சாமிக்கும் அய்யப்பன் பக்தர்களுக்கும் இடையில் தரகராக நின்று கொண்டு அய்யப்பனோடு பேசும் பூசாரிதான் கைதாகிறார். இதை நீங்கள் படிக்கும்போது கைதாகி இருப்பார்!

சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் தந்திரிகள் ஆகம விதிப்படி நாளும் குளித்துவிட்டுத்தான் பூசை செய்ய வேண்டும். ஆனால் இப்போது சபரிமலை கோயிலில் உள்ள தந்திரியும் மேல் சாந்தியும் குளிப்பதில்லை. குளிக்காமல்தான் பூசை செய்கிறார்கள். ஆசார நியமனம் பார்ப்பதில்லை. மகாருத்ர யாகம், சகஸ்ரகலசம் ஆகியவையும் முறையாக நடப்பதில்லை. இதனால் சபரிமலையின் புனிதம் கெட்டுவிட்டது. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்ற வீசிய குற்றச் சாட்டுக்களை வைத்து அவர் கைது செய்யப்படுகிறார் என்று நீங்கள் நினைக்கக் கூடும். ஆனால் அதுவல்ல காரணம். குளிக்காதது கிரிமினல் குற்றமல்ல!

ஓகோ! எல்லாப் புரோகிதர்களும் செய்வது போல அய்யப்பன் போட்டிருக்கும் பல கோடி பெறுமதியான நகைகளில் சிலவற்றைத் தனது மகள் அல்லது மகன் திருமணத்துக்குத் திருடி இருப்பார். அதுதான் காவல்துறை அவரைக் கைது செய்கிறது என்கிறீர்களா?அதுவும் இல்லை.

அப்படி அய்யப்பன் கிலோக் கணக்கில் போட்டிருக்கும் தங்கம், வைரம் வைடூரியம் ஆகியவற்றால் செய்த நகைகளைத் திருடுவது பெரிய குற்றமல்ல! எல்லாப் பூசகர்களும் பூசாரிகளும் அதை அவ்வப்போது செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். சில சமயம் சாமி சிலைகளையே திருடி விடுகிறார்கள்!

கொலை, களவு, பொய், கள், காமம் என்ற பஞ்சமா பாதகங்களில் அய்யப்பன் கோயில் பூசாரியார் கடைசிப் பாதகமான காமத்திற்காகக் கைது செய்யப்படுகிறார்! அய்யப்பனுக்குக் களங்கம் ஏற்படுத்திய தந்திரியை சிறையில் தள்ளுங்கள் என தேவசம் சபை அமைச்சர் ஆவேசமாகப் பேசியுள்ளார். தந்திரியின் வேலையையும் தேவசம் சபை பறித்து விட்டது. வரைவின்மகளிர் வீட்டை காமகோட்டமாக்கி தாகசாந்தி செய்யப்போன சபரிமலை அய்யப்பன் கோயில் தந்திரிதான் வளமாக சில இளைஞர்களிடம் மாட்டிக் கொண்டார்.

தந்திரி மாறு வேடத்தில் போகவில்லை. நெற்றியில் பட்டை, நடுவில் பெரிய குங்குமப் பொட்டு, கழுத்தில் இரத்தினமாலை, கையில் தங்கக் காப்புக்கள், விரலில் இரத்தின மோதிரங்கள் இடுப்பில் பட்டு வேட்டி இத்தியாதி இலட்சணங்களோடு அம்பாள் தரிசனத்துக்குப் போயிருக்கிறார்!

இவை போதாதா அவரை யார் என்று அடையாளம் காண? அவரது படம்தானே நாளும் பொழுதும் செய்தித்தாள்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. படத்தை வைத்துக் கொண்டுதான் இளைஞர்கள் அவரை எளிதாக அடையாளம் கண்டு சுற்றி வளைத்திருக்க்கிறார்கள்.

ஆடையில்லாத அழகிகளோடு பூசாரி கலவிக் கடலில் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த போது இளைஞர்கள் அந்தக் காட்சியை படப்பெட்டிக்குள் பிடித்துக் கொண்டார்கள்!

ஒரு கோடி உரூபா தருவதாக தந்திரி தந்திரமாக பேரம் பேசிப் பார்த்தார். முடியவில்லை.

கழுத்தில் போட்டிருந்த இரத்தினமாலை, கைகளில் கட்டியிருந்த தங்கக் காப்புக்கள், விரலில் போட்டிருந்த இரத்தின மோதிரங்கள் என எல்லாவற்றையும் கழட்டிக் கொடுத்து விட்டு தந்திரி அங்கிருந்து தப்பியிருக்கிறார். தப்பின தந்திரி சும்மா இருந்திருக்கக் கூடாதா?

கேரளாவின் எர்ணாகுளம் காவல்துறையிடம் அவர் ஒரு முறைப்பாடு கொடுத்தார். “கொச்சியில் பாலாரிவட்டம் பகுதியில் வீடு கட்டும் வேலை நடந்துவருகிறது. அதைப் பார்ப்பதற்காக செங்கன்னூரில் மாலை 3 மணிக்குப் புறப்பட்டேன். கல்லூர் அருகே டாடா சுமோ மற்றும் குவாலிஸ் கார்கள் என் காரை ஓவர்டேக் செய்து மறித்து நின்றன. அதில் இருந்து 9 பேர் இறங்கினர். அவர்களது பிளாட்டில் விளக்கேற்றி வைக்க வேண்டும், 5 நிமிடத்தில் திரும்பி விடலாம் என்றார்கள். ஒரு பிளாட்டுக்கு அழைத்துச் சென்றனர். நான்காவது மாடிக்குச் சென்றதும் ஒரு அறையில் என்னைத் தள்ளிக் கதவை மூடினர். என் ஆடைகளை அவிழ்த்துவிட்டு கட்டிலில் தள்ளினர். பின்னர், கறுத்த நிறத்தில் இருந்த பெண்ணை எனக்கு அருகே தள்ளிவிட்டனர். இரண்டு பேரின் தலைகளைச் சேர்த்து வைத்தும் நாங்கள் கட்டிப்பிடித்துக் கொண்டு கிடப்பது போலவும் போட்டோ எடுத்தனர். அந்த பெண் ஒட்டுத்துணிகூட இல்லாமல் நிர்வாணமாக இருந்தார்.

இரண்டு நிமிடத்திற்குப் பிறகு திரும்ப வந்தார்கள. போட்டோவைக் காட்டி ரூ.30 லட்சம் கேட்டனர். கேட்டதைத் தராவிட்டால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டினர். நான் இங்கிருந்து போனால்தான் பணம் தரமுடியும் என்றேன். பணமோ, செக்கோ உடனே தர வேண்டும் இல்லாவிட்டால் போட்டோவை வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். என்னிடம் இருந்த செல்போன், பிரேஸ்லெட், இரத்தின மாலை, இரத்தின மோதிரங்களைப் பறித்துக்கொண்டு வெளியே விட்டனர்.”தந்திரி கொடுத்த முறைப்பாட்டை விசாரித்த காவல்துறை அவர் சொன்னது பஞ்சமா பாதகங்களில் இன்னொரு பாதகமான பொய் என்ற முடிவுக்கு வந்தனர். கண்டரரு மோகனரு கொடுத்த முறைப்பாட்டில் கூறியள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் சுமார் 22 வீடுகள் உள்ளன. தந்திரி அடைக்கப்பட்டதாகக் கூறிய அந்த வீட்டில் 2 பெண்கள் மட்டுமே உள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே பரத்தமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. குறிப்பிட்ட இந்த வீட்டிற்குக் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 20 முறைக்கு மேல் தந்திரி சென்று இருக்கிறார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் அந்த வீட்டுக்குள் அவர் இருப்பார். அதன் பிறகே வெளியே வருவாராம். நீண்ட நாள்களுக்குப் பிறகே இந்த வீட்டுக்கு வந்து செல்வது சபரிமலை தந்திரி என்பதை அந்தப் பகுதி இளைஞர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் அவரைப் பிடிக்க திட்டம் போட்ட இளைஞர்கள் கடந்த 23 ஆம் நாள் வழக்கம் போல் அழகிகளின் வீட்டுக்குள் புகுந்த தந்திரியை சுற்றி வளைத்துப் பிடித்திருக்கின்றனர். அந்த பெண்களுடன் தந்திரி நெருக்கமாக இருப்பதைப் புகைப்படம் எடுத்துள்ளனர்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிக்கு தந்திரியை நன்றாகத் தெரிந்திருக்கிறது. அடுக்குமாடி வாசலில் வைக்கப்பட்டு இருக்கும் வருகைப் பதிவேட்டில் குறிப்பிட்ட அந்த வீட்டிற்குச் செல்வதாக தந்திரி எழுதி இருக்கிறார். பரத்தையர்களுக்கு அந்த இடத்தில் பிளாட் வாங்கிக் கொடுத்துவரே தந்திரிதான். பிளாட்டின் உரிமையாளரான பெண்ணுக்கும் தந்திரிக்கும் ஏற்கனவே நெருக்கிய தொடர்பு உண்டு.தந்திரி வரும் நாள்களில் வேறு எந்த ஆட்களையும் அந்த அழகிகள் அனுமதிக்க மாட்டார்களாம். மேலும் அவர்களிடம் போகும் போது சபரிமலை அய்யப்பன் பிரசாதத்தையும் தவறாது கொண்டு போய் கொடுத்துள்ளார்.

இவ்வாறு தந்திரியின் முறைப்பாட்டை விசாரித்த எர்ணாக்குளம் காவல்துறை தெரிவிக்கிறது. இதற்கான ஆதராங்கள் அனைத்தும் தற்போது தங்களிடம் உள்ளதாக காவல்துறை மேலும் சொல்கிறது. விசாரணை பற்றி எர்ணாகுளம் துணை காவல்துறை அதிபர் பத்மகுமார் கூறியதாவது:

நேற்று முன்தினம் (யூலை 23) அந்தச் சம்பவம் மாலை 6.30 க்கு நடந்ததாக தந்திரி கூறினார். காவல்துறைக்கு இரவு 12.30 க்கு முறைப்பாடு கொடுத்துள்ளார். அதுவும் தனது வழக்கறிஞர் மூலமாகத்தான் முறைப்பாடு கொடுத்தார். அப்போதே அவர் மீது காவல்துறைக்கு அய்யம் எழுந்தது.அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் தந்திரியுடன் காணப்பட்ட பெண் சேர்த்தலையைச் சேர்ந்தவர். விபசார வழக்கில் தேவரை என்ற இடத்தில் கைது செய்யப்பட்டவர். இப்படிப்பட்ட பெண் தனியாக வசிக்கும் குடியிருப்பில் தந்திரிக்கு என்ன வேலை?தந்திரியுடன் இருந்த இளவயது பெண்ணிடமும் வீட்டின் சொந்தக்காரர் எனக் கருதப்படுகின்ற இன்னொரு பெண்ணிடமும் சிறப்புப் பிரிவு துணை ஆணையர் ஏ.பி. யோர்ஜ் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை நடத்தினார். முதலில் இளைஞர்களுக்கு உருபா 20 ஆயிரம் கொடுக்க தந்திரி முயற்சி செய்துள்ளார். பின்னர் கோடிக்கணக்கில் பேரம் பேசியுள்ளார்.இதுபற்றிக் கேரள தேவசம் சபை அமைச்சர் சுதாகரன் கூறும்போது “சபரிமலை விவகாரத்தில் புதிது புதிதாக பல பிரச்னைகள் முளைக்கின்றன. தந்திரி மீதான பயங்கர குற்றச்சாட்டு கேரள மக்களுக்கே பெருத்த அதிர்ச்சியாக உள்ளது. கேரள கலாசாரத்தையே அவர் அவமானப்படுத்தி விட்டார். இது குறித்து தேவசம் சபை முறையான விசாரணை நடத்த வேண்டும். அவரைக் கைது செய்து சிறையில் தள்ள வேண்டும்” குறிப்பிட்டார்.பின்னே இருக்காதா என்ன? ஆண்டொன்றுக்கு 75 கோடி உருபா வருமானமுள்ள மிகவும் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் ஆலய தலைமைப் பூசாரி பட்டப் பகலில் கோயில் பிரசாதத்தோடு பரத்தையர் வீட்டுக்குப் போகிறார் என்றால் அது கேரள கலாசாரத்துக்கு மட்டுமல்ல இந்து மதத்துக்கே பெரிய அவமானமாகும். சொர்க்கத்துக்கு வழிகாட்டும் பூசுரர்கள், பூசாரிகள், சாமியார்கள் விலைமகளிர் இருப்பிடங்களுக்குப் போய் பாலியல் தாக சாந்தி செய்து மாட்டிக் கொண்ட முதல் ஆசாமி இந்த தந்திரி மட்டும் என்றில்லை.

குஜராத் மாநிலம் தபோய் என்ற பகுதியிலுள்ள வட்தால் சுவாமி நாராயன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு வரும் பக்தைகளிடம் சாமியார்களான சந்த், தேவ் வல்லப் ஆகியோர் வரம்பு மீறி நடப்பதாகக் கோயில் நிருவாகத்துக்குத் தொடர்ந்து முறைப்பாடுகள் வந்திருக்கின்றன. அதுவும் கோயிலுக்குள் உள்ள குடிலிலேயே இந்தக் கூத்துகள் நடைபெற்றிருக்கின்றன என முறைப்பாடுகள் வந்தன. ஆனால், சாமியார்களைப் பிடிக்காத சிலர்தான் இப்படி பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள் என்று கோயில் நிருவாகம் மறுத்து வந்தது.இதையடுத்து சாமியார்கள் பெண்களுடன் இருப்பதை இரகசியமாக வீடியோ படமெடுத்து ஆதாரத்துடன் வெளியிடுவது என்ற முடிவுக்கு எதிர்த்தரப்பினர் வந்திருக்கின்றனர். அடுத்த கட்டமாக மினியேச்சர் வீடியோ காமிரா ஒன்று சாமியார்களின் குடிலுக்குள் பொருத்தப் பட்டது. இதையறியாத சாமியார்கள் வழக்கம்போல அறைக்குள்ளே பாலியல் கூத்தடிக்க.. அது அப்படியே வீடியோவில் பதிவாகி விட்டது.வீடியோவில் பதிவான காட்சிகளை வி.சி.டி ஆக மாற்றம் செய்த எதிர்த்தரப்பினர் அதை குஜராத்தின் பிரபல பத்திரிகையான சந்தேஷ்க்கு அனுப்பி விட்டனர்.அந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட அனைவரின் முகங்களும் தௌ்ளத் தெளிவாகவே பதிவாகியிருக்கின்றன.ஒரு பெண் அமர்ந்திருக்கும் காட்சி வீடியோவில் முதலாவதாக இடம் பெற்றிருக்கிறது. கோயிலுக்கு அடிக்கடி வந்து செல்லும் அந்தப் பெண்ணின் பெயர் ரூபல்.அடுத்து வெள்ளை பைஜாமா அணிந்த கோயிலின் பணியாளர் ஒருவர், பாய் மற்றும் தலையணையை அந்த அறையினுள் விரித்து விட்டுச் செல்கிறார். அதன் பிறகு சிறிது நேரம் கழித்து தலையில் குடுமி, நெற்றியில் நாமம், கழுத்தில் உருத்திராட்சம், மார்பில் ப+ணூல், இடுப்பில் காவி சகிதமாகத் தோற்றமளிக்கும் சாமியார் தேவ் வல்லப் அந்த அறையினுள் நுழைகிறார். அறையில் எரிந்து கொண்டிருக்கும் விளக்கினை தேவ் மெல்ல அணைக்க, அந்தப் பெண்ணோ, 'விளக்கை அணைக்கவேண்டாம் ப்ளீஸ்.. அது எரியட்டும்” என்று தடுக்க, மீண்டும் ஸ்விட்ச் ஆன் செய்யப்படுகிறது.பின்னர் ரூபலை நெருங்கும் சாமியார், அவரது ஆடைகளைக் களைகிறார். 'வேண்டாமே” என்று மறுக்கும் ரூபலை, தனது வாயில் விரலை வைத்தபடி 'மூச்"; என எச்சரித்து, காரியமே கண்ணாக சாமியார் இயங்க ஆரம்பிக்கிறார். முரண்டு பிடிக்கும் அந்தப் பெண்ணிடம் முரட்டுத்தனமாக தேவ் வல்லப் படர்ந்து கொள்ள, வேறு வழியின்றி அந்தப் பெண்ணே தனது உடைகளைக் களைகிறார். தேவ் வல்லப் தன்னுடைய இச்சையைத் தணித்துவிட்டு வெளியேற, அடுத்த விளையாட்டைத் தொடர சாமியார் சந்த் உள்ளே நுழைகிறார். தேவ் வல்லப்பிற்கு தான் சளைத்தவனில்லை என்பதைப் போல சந்த்தும் ரூபலிடம் உடலுறவு கொள்கிறார். இந்தக் காட்சியுடன் வீடியோ முடிந்துவிடுகிறது. இந்தச் சம்பவம் நடந்தது எப்போது என்ற தெளிவான விவரம் ஏதும் தங்களுக்குச் சரிவரக் கிடைக்கவில்லை என்கிறது சந்தேஷ் பத்திரிகை.இந்தச் செய்தியும், படங்களும் பத்திரிகையில் மட்டுமன்றி, சந்தேஷின் இணையதளத்திலும் வெளியாகி மிகப்பெரிய அளவிலான பரபரப்பு குஜராத்தைப் பற்றிக்கொண்டது. கோயிலினுள் காமோற்சவம் நடத்திய சாமியார்கள் இருவரும் தங்களது அந்தரங்கம் அம்பலமானதையடுத்து அங்கேயிருந்து தப்பியோடிவிட்டனர். ரூபல் என்ற அந்தப் பெண்ணும் தலைமறைவாகி விட்டார். சாமியார்கள் இருவரும் கோயிலுக்கு அருகே உள்ள திருமண மண்டபத்தில் வேலை செய்யும் பெண்களையும், தங்களது குடிலுக்கு வர வழைத்து அனுபவித்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு சுவாமி நாராயன் கோயிலுக்குப் பெண்களின் வரத்துக் கணிசமாகக் குறைந்து விட்டிருக்கிறது.இவை நடந்தது 2004 நொவெம்பரில். இப்போது கோயில் அர்ச்சகர்கள், சாமியார்கள் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.காந்தியார் கோயில்கள் விபச்சார விடுதியென்று சொன்னார்! அவர் வாய்க்குச் சர்க்கரையைத் தான் கொட்ட வேண்டும். மதம் ஒரு போதை. கடவுள், பக்தி, கோயில், குளம், ஜீவாத்மா - பரமாத்மா, நரகம் -சொர்க்கம் போன்றவை பக்திப் போதையை விற்பனை செய்யப் பயன்படுத்தும் வசீகரமான வார்த்தை சாலங்கள்! மனித சிந்தனைக்கு விலங்கிட்டு மனிதனை விலங்காகவே ஆக்கும் ஒரு வகை மூளைச் சலவை!

நடிகை ஜெயமாலா அய்யப்பனைத் தொட்டுக் கும்பிட்டதால் அய்யப்பனுக்குத் தீட்டு என்று சொல்லி பெரிய பொருள்செலவில் பரிகாரம் செய்யப்பட்டது. இப்போது தந்திரியால் அய்யப்பனுக்கு தீட்டுப்பட்டுவிட்டதாம். அதற்கும் பரிகாரம் செய்யப்போகிறார்களாம்! பாவம் அய்யப்ப பக்தர்கள். இவற்றை எல்லாம் படித்து விட்டு அவர்கள் அவமானத்தால் குளம், குட்டை ஒரு முழக் கயிறு, ஒரு துளி விஷம் ஆகியவற்றைத் தேடுவார்கள் என்று யாரும் நினைத்தால் அவர்கள் ஏமாறுவார்கள். பக்தி போதை அவ்வளவு சுலபத்தில் முறிந்துவிடாது!


அய்யப்பனுக்குத் தீட்டு! பயங்கர கோபத்தில் இருக்கிறார்!

திருமகள்

சபரிமலை அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார்! ஏன் அப்படி? கடவுளுக்கும் சாதாரண மனிதனைப் போல் கோபதாபம் இருக்கிறதா? அது கடவுள் இலக்கணத்துக்கு முரண் இல்லையா?

இந்துக் கடவுளர்க்கு கோபமும் வரும் தாபமும் வரும் மோகமும் வரும்! எல்லாம் வரும்!அது சரி. அய்யப்பன் பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்று யார் சொன்னது?அட இது கூடத் தெரியாதா? சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் சொல்லுகிறார்!யார் இந்த உன்னிவிருஷ்ண பணிக்கர்?அவரைத் தெரியாதா? சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் என்ன சாதாரண ஆளா? முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆஸ்தான சோதிடர்! அவர் சபரிமலை அய்யப்பன் சன்னிதியில் பிரஸ்னம் (சோழிகளை உருட்டி விட்டு கடவுளிடம் அருள் வாக்குக் கேட்பது) செய்து பார்த்து 19 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் அய்யப்பன் சிலையைத் தீண்டிவிட்டதாகவும் அதனால் அய்யப்பனுக்குத் தீட்டுப்பட்டு விட்டது என்கிறார். யார் அந்தப் பெண்? பெண் தொட்டு அய்யப்ப சாமிக்குத் தீட்டுப்பட்டுவிட்டதென்றால் அய்யப்பiனைவிட அந்தப் பெண்ணுக்கு அதிக சக்தி இருக்கிறது என்றல்லவா பொருள்? சூனாமானக்காரன் போல் பேசாதே! நாத்தீகம் பேசினால் நாக்கு அழுகிச் சாவாய்! கடவுள் உன்னைச் சும்மா விடமாட்டார். அந்தப் பெண் ஜெயமாலா என்ற கன்னட நடிகை, அவர் 19 ஆண்டுகளுக்கு முன் அய்யப்பன் ஆலயத்துக்குச் சென்ற போது கூட்ட நெரிசல் நெட்டித் தள்ளியதால், கோயில் கருவறைக்குள் போய் விழுந்தாராம். அப்போதுதான் அந்த நடிகை அய்யப்பன் திருவுருவத்தைத் தொட்டுக் கும்பிட்டிருக்கிறார்!கோயில் பூசாரியும் தொட்டுத்தானே கும்பிடுகிறார்? அவரும் மனிதர்தானே? ஜெயமாலா என்ற நடிகை மட்டும் ஏன் தொட்டுக் கும்பிடக் கூடாது? பெண் கும்பிடக் கூடாது என்று சொல்வது பெண் அடிமைத்தனத்துக்கு சாமரம் வீசுவது போல் இல்லையா?விபரம் தெரியாமல் பேசாதே! ஜெயமாலா பெண். அய்யப்பன் சாமிக்குப் பெண் என்றால் பிடிக்காது! பெண்கள் கோயில் பக்கம் போகக் கூடாது! ஏன் அப்படி? சிவபெருமான் தனது உடலில் பாதியைப் பெண்ணாக வைத்திருப்பதாக புராணிகர்கள்
சொல்கிறார்களே? அதாவது அர்த்தநாரீசுவரர் வடிவில் இருக்கிறாராமே? அது புளுகா? ஓய்! சிவன் வேறு அய்யப்பன் வேறு! அய்யப்பன் அரிக்கும் அரனுக்கும் பிறந்தவர். எனவே அவருக்குப் பெண்களைப் பிடிக்காது! பாலாழியைக் கடைந்ததும் அமுதம் எடுத்ததும் பாகவதத்தில் விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. மோகினி வடிவமெடுத்த விஷ்ணுவைக் கண்டதும், தன்னுடைய மனைவியான பார்வதி அருகில் இருப்பதைக்கூடப் பொருட் படுத்தாமல் சிவன் காமத்துடன் நெருங்கினார். கடைசியில் அவருக்குச் சுக்கில வெளிப்பாடு உண்டானது. அது விழுந்த இடங்கள் பொன்னும் வெள்ளியும் விளையும் பிரதேசங்களாக மாறின எனப் பாகவத புராணம் கூறுகின்றது. அய்யப்பன் சாமிக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் தோசம் ஏற்பட்டுவிட்டது என்றால் இவ்வளவு நாளும் செய்த வழிபாடு, பூசை எல்லாம் சுத்த றயளவந இல்லையா? ஆமாம்! தீட்டு நீங்க கோயிலை இனிப் புனிதப்படுத்த வேண்டுமஆகம விதிகளுக்கு மாறாக தலித்துக்களைக் கோயிலுக்குள் அனுமதித்த போதும் சுவாமிக்குத் தீட்டுப் பட்டுவிட்டதென்றுதானே பக்தர்கள் புலம்பினார்கள்? கடவுளர் கோயிலைவிட்டே ஓடிவிட்டதாகத்தானே பக்தர்கள் அலம்பினார்கள்?

ஓய்! தெரியாமல் பேசாதேயும். தீட்டுப் போகத்தானே பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்கிறோம்! கும்பாபிஷேகம் செய்வதால் நாய், கோழி, பஞ்சமர் நுழைவதால் தீட்டுப்பட்டுப் போன கோயில் புனிதம் அடைகிறது!

கன்னட நடிகை ஜெயமாலா போல இன்னொரு கிறித்தவ மத நடிகை இராஜ இராஜேஸ்வரி கோயிலுக்குள் நுழைந்து கும்பிட்டதால் புனிதம் கெட்டுவிட்டதாமே?ஆமாம்! கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த நடிகை மீரா ஜாஸ்மின் கடந்த யூன் 29 ஆம் நாள், கேரள மாநிலம் கண்ணூரை அடுத்த தளிபரம்பாவில், இந்துக்கள் மட்டுமே வழிபட அனுமதிக்கப்படும் இராஜ இராஜேஸ்வரி கோயிலுக்குள் நுழைந்து சாமி கும்பிட்டு காணிக்கை செலுத்தினார். இதையடுத்து தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்ட அவர் புனிதப்படுத்தும் சடங்குகளுக்காக கோயில் நிருவாகத்துக்கு ரூ.10 ஆயிரம் அனுப்பி வைத்தார். கோயிலைப் புனிதப்படுத்துவதற்காக 10 தந்திரிகளைக் கொண்டு இரண்டு நாள்கள் "சுத்தி திரவிய கலச' பூஜை நடத்தக் கோயில் நிருவாகம் முடிவு செய்தது. இதற்கு ரூ.25 ஆயிரம் ஆகும் எனக் கோயில் நிருவாகம் சொன்னதால் மேலும் ரூ.15 ஆயிரம் தர மீரா ஜாஸ்மின் ஒப்புக் கொண்டுள்ளார். சபரிமலையில் ஊழல் செய்வதற்காகவே தேவசம் சபையும், தந்திரியும் (பூசாரியும்) உன்னிகிருஷ்ண பணிக்கரும் சேர்ந்து தேவப்பிரஸ்னம் நடத்தியுள்ளனர் என்று பந்தளம் அரண்மனை வட்டாரம் குற்றம் சாட்டியுள்ளதே?அதில் உண்மை இல்லை. வெறும் கட்டுக் கதை! பந்தளம் அரசரின் வளர்ப்பு மகன்தான் அய்யப்பன் என்பது அய்தீகம். அய்யப்பன் வேண்டுகோள்படி சபரிமலையில் அய்யப்பன் கோயில் கட்டப்பட்டது என்பது வரலாறு. கோயில் கருவறைக்குள் யாரும் நுழைய முடியாது. அதுவும் ஒரு பெண் நுழைந்து சுவாமி சிலையைத் தொட்டு வணங்குவது என்பது கற்பனையில் கூட நடக்க முடியாதது. எனவே உன்னிகிருஷ்ண பணிக்கரும் நடிகை ஜெயமாலாவும் கூட்டுச் சேர்ந்து எதற்காகவோ நாடகமாடுகிறார்கள் என்று கோயில் தந்திரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

உன்னிகிருஷ்ண பணிக்கரோ தந்திரிகள் ஆகம விதிப்படி நாளும் குளித்துவிட்டுத்தான் பூசை செய்ய வேண்டும். ஆனால் இப்போது சபரிமலை கோயிலில் உள்ள தந்திரியும் மேல் சாந்தியும் குளிப்பதில்லை. குளிக்காமலேயே பூசை செய்கிறார்கள். மீறிக் குளித்தாலும் குழாய்த் தண்ணீரில் குளிக்கிறார்கள், ஆசார நியமனம் ஒன்றும் பார்ப்பதில்லை, மகாருத்ர யாகம், சகஸ்ரகலசம் ஆகியவையும் முறையாக நடப்பதில்லை இதனால் சபரிமலையின் புனிதம் இவர்களால் கெட்டுவிட்டது.

அய்யப்பன் பயங்கரக் கோபத்தில் இருக்கிறார் எனப் பதிலுக்கு உன்னிகிருஷ்ண பணிக்கர் குற்றம் சாட்டுகிறார். தந்திரியும் மேல் சாந்தியும் நம்பூதிரிப் பிராமணர்கள். உன்னிகிருஷ்ண பணிக்கர் அவரது பெயரில் காணப்படும் சாதியைச் சேர்ந்தவர். எனவே இந்தச் சண்டை பிராமணர் – பிராமணர் அல்லாதார் என்ற மட்டத்திலும் நடைபெறுகின்றது.இதற்கிடையில் நடிகை ஜெயமாலா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக குருவாயூர் சூரியன் நம்பூதிரி என்ற பூசாரி தெரிவித்துள்ளார். தான் பிரஸ்னம் நடத்திப் பார்த்த போது கோயிலுக்குள் பெண் வந்து போனதும் கூடவே கள் வாசனை இருப்பதும் தெரிந்ததாக உன்னிகிருஷ்ண பணிக்கர் கூறுகிறார்.சபரிமலைக்கு யாத்திரை போகும் அய்யப்ப பக்தர்கள் 48 நாள் மச்சம், மாமிசம், கள், சாப்பிடக் கூடாது. காலில் செருப் பணியக் கூடாது, உடல் உறவு வைக்கக் கூடாது. உறவினர் யாராவது இறந்தால்கூட பிணத்தைப் பார்த்து இறுதி மரியாதை செய்யப் போகக் கூடாது. ஆனால் பல பக்தர்கள் தலையில் இருமுடியும் இடுப்பில் மதுப் போத்தலோடுதான் மலை ஏறுகிறார்களாம்!

அய்யப்ப பக்தர்களில் பிரசித்தி பெற்றவர் நடிகர் நம்பியார். கடந்த 56 ஆண்டுகளாகச் சபரிமலைக்குப் போய்வருகிறார். ஆனால் அவர் ஒரு முடாக் குடிகாரர் என்பது பலருக்குத் தெரியாது. பெரும்பாலோர் ஆண்டில் 360 நாளும் பாபம் செய்து விட்டு 5 நாள் மட்டும் அதனைக் கழுவ நோன்பு இருக்கிறார்கள். அய்யப்பன் வழிபாடு தமிழனுக்குப் புதியது. தமிழ்நாட்டுக்குப் புதியது. அய்யப்பன் ஆகமத்தில் சொல்லப்படாத கடவுள். கடந்த 50 ஆண்டுகளாகத்தான் “சாமியே சரணம் அய்யப்பா” கூச்சல் கேட்கிறது. அதற்கு முன் தமிழன் பழனி முருகனுக்குத்தான் காவடி எடுத்தான். தில்லை நடராசருக்குத்தான் நோன்பு இருந்தான். இந்த கேரள இறக்குமதியால் பக்தி போதையில் இருக்கும் தமிழர்களின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது. பணம் படைத்தவர்கள் பொழுதைப் போக்க, பழைய சேர நாட்டின் இயற்கைக் காட்சிகளைக் கண்டு களிக்க சபரிமலைச் செலவை ஒரு சாக்காக வைத்துள்ளார்கள். அதைப் பார்த்துவிட்டு ஏழையும் கடன்பட்டாவது மலை ஏறுகிறான். கார்த்திகை மார்கழியில் சபரிமலைக்குப் போக வாங்கும் கடன், வட்டியோடு குட்டி போட்டு அடுத்த கார்த்திகை மார்கழி வரையிலும் நீள்வதும் உண்டு. மறைந்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் தான் கேட்டார் குன்றக்குடி முருகனுக்கும், பழனி தண்டாயுதபாணிக்கும் 'பவர் குறைந்துவிட்டதா? என்று. எதிலும் புதியதைத் தேடும் தமிழன் மனம் புதிய புதிய கடவுளையும் தேடுகிறது. அவ்வாறு புதிய கடவுளைத் தேடியதன் விளைவே கேரள அய்யப்பன் புகழ் ஏறுவதற்கும் தமிழ்நாட்டுக் கடவுள்கள் மதிப்பு இறங்குவதற்கும் காரணமாயின. இன்று மலையாள ஆந்திரக் கடவுளர்க்குக் கொண்டாட்டம் தமிழ்நாட்டுக் கடவுளர்க்குத் திண்டாட்டம் என்றாகிவிட்டது.

இன்று இந்தியாவில் உள்ள பணக்காரக் கடவுளான திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டொன்றுக்கு 500 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. ஏழுமலையானை வழிபட நாள் தோறும் 50,000 அடியார்கள் மலை ஏறுகிறார்கள். ஏழுமலையானுக்கு நாளும் 100 கோடி பெறுமதியான தங்கம், வைரம், வைடூரியம், மரகதம், மாணிக்கம், நவரத்தினம், கோமேதகம் போன்ற விலை உயர்ந்த வைர ஆபரணங்களை அணிவித்துப் புதிய பட்டு ஆடையால் அலங்காரம் செய்கிறார்கள். ஒவ்வொன்றும் 60 கிலோ எடையுள்ள இலட்டுகள் ஏழுமலையானுக்கு ஒவ்வொரு நாளும் படைக்கப்பட்டு பின் அடியார்களுக்கு வழங்கப்படுகிறது. ஏழுமலையானின் நிரந்தர வைப்பு நிதி 2835 கோடியை எட்டியுள்ளதாம். கடந்த 2 ஆண்டுகளில் ரூ 500 கோடி அதிகரித்துள்ளது. ஏழுமலையானின் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் ரூ600 கோடி. இதற்கான வருவாயில் ரூ 230 கோடி நிரந்தர வைப்பு நிதியில் இருந்து கிடைக்கும் வட்டி என்கிறது தேவஸ்தானம். தினந்தோறும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை வங்கியில் பணம் செலுத்தும் ஒரே நிறுவனம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் மட்டும்தான் என்பது மனங்கொள்ளத்தக்கது. திருப்பதி ஏழுமலையானோடு சபரிமலை அய்யப்பனை ஒப்பிட்டால் பின்னவர் “ஏழை”தான். ஆண்டு வருமானம் 75 கோடி மட்டுமே. கேரள அரசு சபரிமலை அய்யப்பனை காசு காய்க்கும் மரமாகப் பார்க்கிறது. சபரிமலையைச் சுற்றியுள்ள காடு அழிக்கப்பட்டு அதன் சூழல் மாசுபடுதப் பட்டுவிட்டது. அருகில் ஓடும் பம்பை நதி அசுத்தமாகிக் குளிப்பதற்குக் கூட உதவாமல் போய்விட்டது. இந்த அய்யப்பசாமி வேடம் ப+ண்டால் 48 நாள் நல்ல உணவு கிடைக்கும் வீட்டில் யாரும் திட்ட மாட்டார்கள், நல்ல மரியாதை, அதுவும் சாமி.. சாமி.. என்று. இந்தச் சலுகைகளால் பொறுப்பற்ற குடும்பத் தலைவர்களும், ஊர் சுற்றும் இளைஞர்களும் அய்யப்பன் சாமி ஆனார்கள். கூடுதல் மரியாதையுடன் மூக்குப் பிடிக்க உணவும் கிடைக்கிறது. அய்யப்பன் தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் பம்பையில் இருந்து 40 கிமீ தூரம் செங்குத்தான மலைப் பாதையில் நடக்க வேண்டும். வயதானோர், இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள், சுவாசக் கோளாறால் அவதிப்படுவோர் பெரிதும் சிரமப் படுகின்றனர்.இவர்கள் நலன்கருதி திருவாங்கூர் தேவஸ்வம் சபை பம்பை - நீலிமலையேற்றம் அப்பாச்சி மேடு - சபரிமலை நடைபாதயில் 18 இடங்களில் உயிர்க்காற்று சுவாச மையங்களை அமைத்துள்ளது. இதுமட்டுமல்ல, உயிர் காக்கும் மருந்துகள், இதய நோய் மருத்துவர்கள் எல்லாம் தயாராக வைக்கப்பட்டிருக்கிறதாம். அய்யப்பனால் எதுவும் ஆகாது துளிகூடப் பயனில்லை என்பது இதிலிருந்து தெரியவில்லையா? காடு, மலை தாண்டி தன்னைப் பார்க்க வரும் தனது பக்தர்களையாவது அய்யப்பன் காக்க வேண்டாமா? அய்யப்பன் கதை அறிவுக்குப் பொருந்தாதது, அருவருப்பானது, எந்தப் பயனையும் தராதது என்பதால் இந்த அய்யப்பன் வழிபாடு தேவைதானா? கடவுள் பக்தி எப்படிக் குடும்பத்தைச் சீரழிக்கும் என்பதை சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படத்தில் நன்றாய்க் காட்டி இருக்கிறார்கள். அதைப் பார்த்தாவது தமிழன் திருந்தக் கூடாதா? (முழக்கம் - யூலை 2006)

1 Comments:

Blogger h said...

nice

1:36 AM  

Post a Comment

<< Home